Friday, June 11, 2010

பிரச்சினைகள் , கவலைகள் சூழ்ந்த உலகத்தில் அவற்றையெல்லாம் அண்டவிடாமல் நகைச் சுவை உணர்வோடு எப்போதும் சிரிப்பும் கும்மாளமுமாக வலம் வருவபவரா நீங்கள்? உங்கள் பெண் தோழி அல்லது மனைவியோடு நகைச் சுவைத் துணுக்குகளைப் பரிமாறி வெடிச் சிரிப்போடு விளையாடி மகிழ்பவரா? உங்கள் குழந்தைகளை கிச்சு கிச்சு மூட்டி குதூகலம் காண்பவரா? எப்போதும் நகைச் சுவைத் தொலைகாட்சி நிகழ்சிகளையே பார்த்து ரசிப்பவரா? ஆம் எனில் நீங்கள் நீண்ட காலம் நோய் நொடிகளின்றி இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வாழ்வீர்கள் என்பது சமீபத்திய ஆராய்ச்சி முடிவு.

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிப்பதாவன:


  • நகைச் சுவை உணர்வும் சிரிப்பும் மன அழுத்தத்தைத் தூண்டும் அட்ரீனலின் என்ற ஹார்மோன் சுரப்பைக் குறைக்கிறது.
  • இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
  • T-செல்களின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
  • மண்டை தசைகளுக்கு பயிற்சி அளித்து இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால்உங்களை விழிப்புணர்வு மிக்கவராக்குகிறது.
மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இது போன்ற ஆராய்ச்சி முடிவுகளை நெடுங்காலத்திற்கு முன்னரே நமது முன்னோர்கள் வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போச்சு என எளிமையாக பழகு தமிழில் கூறிவிட்டு சென்றுள்ளனர். எனவே எப்போதும் நீங்களும் சிரித்து சுற்றியிருப்பவர்களையும் சிரிக்கவைத்து நீடூழி வாழ்வாங்கு வாழ்வீர்களாக.

Tuesday, June 8, 2010

இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2, 3 ஆம் தேதிகளின் நடு நிசி...... போபால் நகரமே தூங்கிக்கொண்டிருந்த போது, யூனியன் கார்பைட் இந்தியா லிமிடெட் என்ற அமெரிக்க பூச்சி கொல்லி உற்பத்தி தொழிற்சாலையில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக கசிவுற்ற மித்தையில் ஐசோ சயனேட் என்ற விஷ வாயு மூவாயிரத்துக்கும் அதிகமான அப்பாவி மக்களின் உயிரை காவு கொண்டது. இக்கோர விபத்தின் தாக்குதலால் இதுவரை முப்பத்தையாயிரதுக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். கடந்த இருபத்தாறு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட போபால் விஷ வாயு வழக்கில் அப்போதைய யூனியன் கார்பைட் இந்தியா நிறுவனத் தலைவர் கேசுப் மகேந்திரா மற்றும் பிற 7 உயர் மேலாண் அலுவலர்களுக்கு அதிகபட்ச இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து அன்று மாலையே ஜாமீனில் விடுவிதிருப்பதன் மூலம் நீதி சாகடிக்கப்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவெனில் முதன்மை குற்றவாளியான அமெரிக்க யூனியன் கார்பைட் குழுமத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலரான வாறன் ஆண்டர்சன் குறித்து தீர்ப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. யூனியன் கார்பைட் குழும அமெரிக்க நிர்வாகம் போபால் தொழிற்சாலையின் அன்றாட செயல்பாடுகளில் தமது நிறுவனமோ அலுவலர்களோ பங்கெடுக்காத நிலையில் போபால் விஷ வாயு விபத்திற்கு தாங்கள் எந்த நிலையிலும் பொறுப்பேற்க முடியாது என்றும் இந்திய நீதிமன்றங்களுக்கு எந்த விதத்திலும் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்றும் அறிவித்திருப்பது மனித நேயம் துளியும் இன்றி கொள்ளை இலாபத்தை மட்டுமே நோக்கமககொண்ட அப்பட்டமான கடைந்தெடுத்த சமூக அக்கறையற்ற முதலாளித்துவத்தின் கோர முகத்தைக் காட்டுவதாகவே உள்ளது.
இந்தியப் பொருளாதாரமும் அளப்பரிய இளைஞர் சக்தியும் நமது நுண்ணறிவும் எதிர்காலத்தில் இந்தியா மாபெரும் உலக சக்தியாக உருவெடுக்கும் என்ற அச்சத்திலேயே தமது நலன்களுக்கு சாதகமாகவும் இந்திய தேசத்திற்கு பாதகமாகவும் சில முடிவுகளை சாமர்த்தியமாக திணிப்பதற்கே அமெரிக்க ஏகாதிபத்திய தலைமை நம்மோடு நெருக்கமான நட்பை நாடுவதாக நாடகமாடுகிறது என்பதை நமது ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேதத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு கோரிக்கை விடுக்கப்பட்ட இழப்பீட்டு தொகையில் பதினைந்து சதவீதத்துக்கும் குறைவாகவே வழங்கி மக்களை ஏமாற்றியதொடல்லாமல் போபால் விஷ வாயு வழக்கில் குற்றச்சாட்டுகளை நீர்க்கசெய்து பண பலமும் அரசியல் அதிகார பலமும் மிக்க யூனியன் கார்பைட் நிறுவனம் குறைந்த தண்டனையோடு தமது மேலாண் உயர் அதிகாரிகளை காப்பாற்றியிருக்கலாம். மேலும் மேல் முறையீடு செய்து குறைந்த பட்ச இந்த தண்டனையிலிருந்தும் கூடத் தப்பித்துவிடலாம். அனால் போபால் விஷ வாயு தாக்குதலில் பலியான பல்லாயிரக்கணக்கான சாமானிய மக்களின் ஆன்மா அவர்களை மன்னிக்காது. இறைவனின் நீதிமன்றத்தில் அதற்கான தண்டனையிலிருந்து தப்பிக்கமுடியாது என்பது திண்ணம்.

Monday, June 7, 2010

தாங்கள் சமீபத்தில் விஜய் தொலைக்கட்சியில் நீயா நானா குழு விவாதத்தை கண்டிருக்கக்கூடும். ஆங்கில வழியில் கல்வி போதிக்கும் மெட்ரிக் பள்ளிகள் அப்பட்டமான வணிக நிறுவனங்களாக செயல்பட்டு வருவது அப்பள்ளிகளின் உரிமையாளர்களின் பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. மெட்ரிக் பள்ளிகளின் உரிமையாலர்களுள் ஒருவர் மட்டும் மக்கள் நலனில் அக்கறை உடையவராய் கட்டண உயர்வு கோரிக்கைக்கு எதிராக குரல் கொடுத்து மனித நேயம் உள்ளவராக நடந்து கொண்டார். ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நமது இந்திய சமூகத்தில் சமத்துவம் காணவேண்டுமெனில் அனைவருக்கும் தரமான கல்வி என்பது அடிப்படை உரிமையாக வேண்டும். அதற்கு அனைத்து கல்வி நிறுவனங்களும் அரசுடமை ஆக்கப்படவேண்டும். இந்தியா முழுவதும் தரம் மிக்க ஒரே பாடத் திட்டம் பள்ளிகளில் கொண்டுவரவேண்டும். அப்போது மட்டுமே எதிகால இந்தியா வளமான வலிமையான தேசமாக உருவெடுக்க முடியும். இதனை நமது பிரதமர் அவர்கள் நடைமுறைக்கு கொண்டு வர ஆவன செய்வார்களேயானால் எதிகால சந்ததியினர் போற்றுவர்.