இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2, 3 ஆம் தேதிகளின் நடு நிசி...... போபால் நகரமே தூங்கிக்கொண்டிருந்த போது, யூனியன் கார்பைட் இந்தியா லிமிடெட் என்ற அமெரிக்க பூச்சி கொல்லி உற்பத்தி தொழிற்சாலையில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக கசிவுற்ற மித்தையில் ஐசோ சயனேட் என்ற விஷ வாயு மூவாயிரத்துக்கும் அதிகமான அப்பாவி மக்களின் உயிரை காவு கொண்டது. இக்கோர விபத்தின் தாக்குதலால் இதுவரை முப்பத்தையாயிரதுக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். கடந்த இருபத்தாறு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட போபால் விஷ வாயு வழக்கில் அப்போதைய யூனியன் கார்பைட் இந்தியா நிறுவனத் தலைவர் கேசுப் மகேந்திரா மற்றும் பிற 7 உயர் மேலாண் அலுவலர்களுக்கு அதிகபட்ச இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து அன்று மாலையே ஜாமீனில் விடுவிதிருப்பதன் மூலம் நீதி சாகடிக்கப்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவெனில் முதன்மை குற்றவாளியான அமெரிக்க யூனியன் கார்பைட் குழுமத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலரான வாறன் ஆண்டர்சன் குறித்து தீர்ப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. யூனியன் கார்பைட் குழும அமெரிக்க நிர்வாகம் போபால் தொழிற்சாலையின் அன்றாட செயல்பாடுகளில் தமது நிறுவனமோ அலுவலர்களோ பங்கெடுக்காத நிலையில் போபால் விஷ வாயு விபத்திற்கு தாங்கள் எந்த நிலையிலும் பொறுப்பேற்க முடியாது என்றும் இந்திய நீதிமன்றங்களுக்கு எந்த விதத்திலும் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்றும் அறிவித்திருப்பது மனித நேயம் துளியும் இன்றி கொள்ளை இலாபத்தை மட்டுமே நோக்கமககொண்ட அப்பட்டமான கடைந்தெடுத்த சமூக அக்கறையற்ற முதலாளித்துவத்தின் கோர முகத்தைக் காட்டுவதாகவே உள்ளது.
இந்தியப் பொருளாதாரமும் அளப்பரிய இளைஞர் சக்தியும் நமது நுண்ணறிவும் எதிர்காலத்தில் இந்தியா மாபெரும் உலக சக்தியாக உருவெடுக்கும் என்ற அச்சத்திலேயே தமது நலன்களுக்கு சாதகமாகவும் இந்திய தேசத்திற்கு பாதகமாகவும் சில முடிவுகளை சாமர்த்தியமாக திணிப்பதற்கே அமெரிக்க ஏகாதிபத்திய தலைமை நம்மோடு நெருக்கமான நட்பை நாடுவதாக நாடகமாடுகிறது என்பதை நமது ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேதத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு கோரிக்கை விடுக்கப்பட்ட இழப்பீட்டு தொகையில் பதினைந்து சதவீதத்துக்கும் குறைவாகவே வழங்கி மக்களை ஏமாற்றியதொடல்லாமல் போபால் விஷ வாயு வழக்கில் குற்றச்சாட்டுகளை நீர்க்கசெய்து பண பலமும் அரசியல் அதிகார பலமும் மிக்க யூனியன் கார்பைட் நிறுவனம் குறைந்த தண்டனையோடு தமது மேலாண் உயர் அதிகாரிகளை காப்பாற்றியிருக்கலாம். மேலும் மேல் முறையீடு செய்து குறைந்த பட்ச இந்த தண்டனையிலிருந்தும் கூடத் தப்பித்துவிடலாம். அனால் போபால் விஷ வாயு தாக்குதலில் பலியான பல்லாயிரக்கணக்கான சாமானிய மக்களின் ஆன்மா அவர்களை மன்னிக்காது. இறைவனின் நீதிமன்றத்தில் அதற்கான தண்டனையிலிருந்து தப்பிக்கமுடியாது என்பது திண்ணம்.