
நமக்குள் ஒரு நரகாசுரன்
அணு அணுவாய் சிதைக்கின்றான்
சோம்பல், பொய்மை, பொறாமை
வெறுப்பு, சினம், தன்னலம்
பொருந்தாக் காமம், பேராசை
இன்னும் பல கோர முகங்களுடன்
நம் சுயத்தை மறைத்து
மரத்துப் போன நம்மை
கொஞ்சம் கொஞ்சமாய்
ருசித்துப் புசிக்கின்றான்
பலவீனமான நம்மால் ஆவதென்ன?
உயிரின் உயிராய் உள்ளுறையும்
பேரறிவுப் பேருணர்வை
சரண்புகுவோம் சடுதியிலே
உள்ளுறையும் பேரொளியில்
இருள் பரப்பும் நரகாசுரன்
இருக்குமிடம் தெரியாமல்
இல்லா தொழிந்திடுவான்
தீப ஒளி நாளாம் தீபாவளி நாளில்
இல்லமெனும் அகம் மட்டுமல்ல
உள்ளமென்னும் அகத்தினிலும்
ஞான தீபம் ஏற்றிடுவோம்
நமக்குள் ஒரு நரகாசுரன்
மரணிக்கும் மகிழ்ச்சியினை
மனம் மலர கொண்டாடிடுவோம்...!!
No comments:
Post a Comment