Wednesday, July 24, 2013

ஆவேச ஆலிங்கனம்..



காற்றும் மரமும் முரட்டுக்
காதலொடு கொள்ளும் ஆவேச
ஆலிங்கனத்தில் சிலிர்த்துக்
குலுங்குகிறது மரத்தின் தேகம்
இலைகளின் அசைவுகளோடு....!!

பனியிலும் வியர்க்கிறோம்

  


இருவர் ஒருவராகிப் பின்னிப்
பிணைந்திட்டப் பொழுதுகளில்
காற்றும் நாகரிகம் கருதி வெளியேறி
நெருக்கத்தை இறுக்கமாக்குகிறது.
அதனால் தான் பனியிலும் வியர்க்கிறோம்
இன்பத் தேணுண்டு கிறங்கிக் கிடக்கையிலே...!!

குளிர் தென்றல்



குளிர்ச்சியும் மென்மையும் இதமும்
உன்னைத் தீண்டித் தழுவிய பின் தான்
தென்றலுக்கும் உரிய இயல்பானதோ....!!

அலை பாய்கிறது மனம்...!!



உன் கார்குழல் காற்றில் அலைபாய
இதழொடு விழியும் கள்ளமின்றி சிரிக்க
புயல் வீசும் கடலில் அலைபாயும்
நாவாயாய் அலை பாய்கிறது என் மனம்...!!

காற்றும் கர்வம் கொள்கிறதடி...!!



உனைக் குறித்த என் தேனூறும்
நினைவலைகள் காற்றில் கலந்திட
பிரபஞ்சத்தையே வென்று தன்னுள்
அடக்கியது போல் காற்றும் கர்வம் கொள்கிறதடி...!!

காற்றும் பிரிக்காத நெருக்கம்



உயிர்கள் இடம் மாறும்
உன்மத்த உன் அணைப்பில்
காற்றும் வெட்கத்தில் காணாமல் போனதுவோ...!!

கனவாய் மலர்கிறது...!!



நின் நினைவுகளைச் சுமந்து
களைத்து கண்ணுறங்கும் வேளையிலும்
நினைவுகள் மடலவிழ்ந்து கனவாய் மலர்கிறது...!!

கண் பேசும் கவிதை



உன் கண் பேசும் கவிதைகளின் முன்
என் எல்லாக் கவிதைகளும் வெற்று
வார்த்தைகளாய் வசீகரமிழந்து போகின்றன...!!

இறை உணர்வே காதல்



பிறப்பு இறப்பில்லாத இறை உணர்வே காதல்
நிறை நிலையில் தூய இறை உணர்வாம்
பேரன்பே மானிடருள் வாத்சல்யமாய் பாசமாய்
நேசமாய் பக்தியாய் இறங்கிப் பரிணமித்து
காலாதீதத்தில் நிறை நிலையாய் முழுமையுறுகிறது
எல்லையிலா நித்தியப் பேரன்புப் பெருவெளியில்....!!

என்னுள் ஒளிவெள்ளம்..!!



உன் விழிகளில் தெறித்த மின்சாரம்
என்னுள் பாய்ந்த அதிர்ச்சியில் மயங்கிடினும்
மறுகணம் பிரகாசமாய் என்னுள் ஒளிவெள்ளம்..!!

சிலையானேன் நான்..



உன் அழகைக் கண்டதும் திகைத்துப் போய்
என் திசுக்களின் அணுக்களில் ஒரு கணம்
உயிரியக்கம் நின்றுவிட சிலையானேன் நான்...!!

யாரைப் புகழ்வேன்



யாரைப் புகழ்வேன் சிலையென
அழகுற மிளிரும் உனைப்
படைத்த பிரம்மனையா..
கருவியாக இருந்த உன் பெற்றோரையா ...
அழகு என்ற சொல் கூட உன் அழகை
விவரிக்கும் போது மட்டுமே அழகாகிறது...!!

சாஸ்வதமான காதல்



காதலுக்கும் காதல் பேசும் கவிதைக்கும்
தோல்வியோ மரணமோ இல்லை.
காதல் கடவுளின் உணர்வு வடிவம்.
கடவுளைப் போல காதலும் சாஸ்வதமானது..!!

காதலும் கவிதையும்



காதலும் கவிதையும் துணையை நினைந்து அகத்தில்
ஒருமுகப் படும் போது மட்டுமே அகப்படுகிறது.
அகத்தில் ஒருமுகப்படும் போது அகத்திலுறையும்
சிவத்தில் இலயிப்பதால் இறையுணர்வாம் காதலும்
அது படடைக்கும் கவிதையும் பிறந்து பெருவேகத்தோடு
கரைபுரண்டோடும் நதி பெருங்கடல் நடுவே கலந்து
அமைதி கொள்வது போல் பேரமைதியில் சுகிக்கிறது....

கறபனைச் சிறகுகள்



என் கற்பனைக்கு
சிறகுகள் தந்து
கவி வானில்
பறக்கச் செய்தவள் நீ...!!

காற்றினைத் தூது விட்டேன்




காற்றினைத் தூது விட உனை
இங்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டு
நம் இருவரின் வெப்பப் பெரு மூச்சின்
வெம்மை தாங்காது தூரப் போய்விட்டதோ...!!

நான் நானாக இல்லை.




நீ இல்லாத பொழுதுகளில்
நான் நானாக இல்லை.
என்னை நானாக வைத்திருப்பதே நீ தான்.
எனக்கான பிம்பத்தைக் கட்டமைப்பவளும் நீயே....!!

நினைவுகளில் நீங்காது வேண்டும் நீ....!!






என்னுள் வந்தாய்...
என் நினைவுகளில்
உன் கரம் கோர்த்து
உன் சுவாசம் உண்டு
உன் அணைப்பின்
கதகதப்பில் திளைத்து
உன்னோடு கணப் பொழுதும்
பிரியாது வாழும் பெறும்பேறில்
உண்ண மறந்து உறங்க மறந்து
இடை நூலினும் மெல்லியதாய் ஆயிடினும்
நினைவுகளில் நீங்காது வேண்டும் நீ....!!

நீயின்றி அமையாது என் உலகு...!!




நீரின்றி அமையாது உலகு
நீயின்றி அமையாது என் உலகு...!!

# கருங்குளம் மா.முருகன்

ஏங்கித் தவிக்குது மனசு




தமக்குள் குவிந்து
தவமாய் தவமிருந்து
மலர்ந்து மணம் பரப்ப
தவியாய்த் தவிக்கும்
மொக்குகளின் ஏக்கம் போல்
உனைக் காண ஏங்கித் தவிக்குது மனசு....!!

விட்டில் பூச்சிகள்




கண்ணையும் கருத்தையும்
கவர்வன வெல்லாம்
வாழ்வில் ஒளியேற்றாது
நம்மைப் பொசுக்கிவிடவும் கூடும் என்பது
விளக்கொளியின் வசீகரத்தில்
வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சிகளாய்
ஈர்ப்பில் இலயித்து வீழும் பலருக்கும் புரிவதில்லை.

புத்தன் முகத்தில் மீண்டும் புன்முறுவலைக் காண்பதெப்போ...?






   

துரோகத்தின் துணை கொண்டு
ஒரு இனம் கருவறுக்கப் பட்டுவிட்டது.
தொப்புள் கொடி உறவில் பூத்த தன்னல பதவி
அது தரும் ஊழல் பெரும் பணம், அதிகாரம் எனும்
துர்நாற்ற மலர்களாய் தமிழக அரசியல் வாதிகள்
அத்துர்நாற்ற மலர்களை மாலையாக்கி அணிந்த
தேசத்தைப் பீடித்த அன்னியப் பிசாசு இவர்களின்
துரோகத்தில் விளைந்த ஆயுதம் கொண்டு
தமிழ் இனத்தைக் கருவறுத்த
புத்தனைப் பின்பற்றுவதாகப் பிதற்றும்
போலி அஹிம்சாவாதிகளின் மாபாதகம் கண்டு
புத்தனும் இழையோடும் மெல்லிய
புன்முறுவலைத் தொலைத்து விட்டான்.
புத்தன் முகத்தில் மீண்டும் புன்முறுவலைக் காண்பதெப்போ...?
வீழ்ந்த தமிழ் இனம் மீண்டும் தன்மானத்தோடு
தலை நிமிர்ந்து சுதந்திரக் காற்றை சுவாசிப்பதெப்போ...?

# கருங்குளம் மா.முருகன்

தகிக்கும் பூமி




புவியெங்கும் படர்ந்த
பசும் மரக்காதலியரைக்
காணாத தவிப்பில் சூரியக் காதலன்
வெப்பப் பெருமூச் செறிகிறான்.....!!

# கருங்குளம் மா.முருகன்

கெஞ்சும் நெஞ்சம்




நீ குழந்தையை கொஞ்சினாய்
உன் விழிகளோ என்னைக் கொஞ்சின
உன் மலர் மடியில் குழந்தையென துஞ்ச
என் நெஞ்சம் வெட்கமின்றி கெஞ்சியது...!!

# கருங்குளம் மா.முருகன்