Friday, June 14, 2013

மனத் தவிப்பு..!!









விடை பெறட்டுமா என
என் விரல் கோர்த்து உள்ளங்கையில்
மெலிதாக அழுத்துகையில்
பிரிவை விரும்பாத உன் மனத் தவிப்பு
மெல்ல மெல்ல எனை ஆட்கொள்கிறது...!!



# கருங்குளம் மா.முருகன்

கற்றுத் தரும் காதல்

 


 



இன்பமும் துன்பமும்
தென்றலும் சூறாவளியும்
ஒன்றைத் தொடர்ந்து பிரிதொன்றாக
மாறி மாறி வருவதே வாழ்க்கை
என்பதை ஒரு கணம் வலி
மறுகணம் களி என காதல் கற்றுத் தருகிறது...!!

# கருங்குளம் மா.முருகன்

திறா மோகம்...!!







ஒன்றே ஒன்று எனக்
கேட்டுப் பெற்று முடிவிலாது
தொடர்ந்தும் தீர்வதில்லை
முத்தத்தின் மீதான மோகம்...!!

# கருங்குளம் மா.முருகன்

ஏங்கித் தவிக்கிறது மனசு...!!










பொங்கித் ததும்பும் உணர்வுகளை
உள்ளுக்குள் அடக்கவே நினைக்கிறேன்
ஆனாலும் அணை உடைந்து பீறீட்டுப்
பாயும் பெருவெள்ளமாய் பெருகுகிறது கண்ணீர்...
கரம் பிடித்து தோள் சேர்த்து ஆறுதலாய்த்
தட்டிக் கொடுத்து தழுதழுக்கும் குரலில்
கண்கள் பனிக்க தாயாய் தாங்கும்
உனைக் காண எத்தனை முறை வேண்டுமானாலும்
சிறு குழந்தையாய் கதறி அழுதிடவே
ஆசையுடன் ஏங்கித் தவிக்கிறது மனசு...!!

# கருங்குளம் மா.முருகன்

பார்வை அம்புகள்









உன் பார்வை அம்புகள்
குத்திக் கிழித்ததில் உன்
இதயப் பலூனில் காற்றாய்
நிறைந்திருந்த நான்
உன் சுவாசக் காற்றில்
கரைந்து கலந்து விட்டேன்

# கருங்குளம் மா.முருகன்

சூரியக் காதலன் ...பனிக் காதலி...!!





கதிரவனின் கிரணக் கரங்களின்
அணைப்பில் கரைந்து காணாமல் போய்விட
சூரியக் காதலனின் வரவிற்காய்
இரவெல்லாம் தவமிருந்தாள் பனிக் காதலி...!!

# கருங்குளம் மா.முருகன்

மாறாத நினைவலைகள்




கடலலைகள் ஓய்ந்தாலும் உனைக்
குறித்த நினைவலைகள் ஓய்வதில்லை
படைப்பும் பிரளயமும் என மாறி மாறி
பிரபஞ்சம் தோன்றி மறைந்தாலும்
நினைவலைகள் ஓய்வதில்லை
மாறாத பிரம்ம நிலை எய்தும்வரை...!!

# கருங்குளம் மா.முருகன்

யாண்டும் பேரின்பம்









தன்னில் சுகிக்கும் தவத்தில் நிறைவு கண்ட மனம்
இன்னும் வேண்டுமென எதையும் எதிர்பார்ப்பதில்லை
மண்ணும் பொன்னும் சமமெனும் ஞானம் வந்தால்
எண்ணம் யாவிலும் யாண்டும் பேரின்பம் நிறையாதோ...!!

# கருங்குளம் மா.முருகன்

துரத்தும் காதல்









நாளுக்கு நான்கு முறை சேர்ந்தாலும்
சலிக்காது எனை துரத்திக் கொண்டே யிருக்கிறாய்
கடிகாரத்தின் சின்ன முள்ளை துரத்தும் பெரிய முள்ளாய்...!!

# கருங்குளம் மா.முருகன்

பூகளீன் ஏக்கம்

 



பூக்களும் ஏங்குகின்றன
உன் தலையில் சரமாய்
தன்னை அலங்கரித்துக் கொள்ள...
அப்போது தாம் அவை
அழகு பெறுகின்றனவாம்....!!

# கருங்குளம் மா.முருகன்

அழகிய கவிதை




நீ மிக அழகு....கவிதை போல...
மீண்டும் மீண்டும் உனை வாசிக்கிறேன்
முழுதாய் புரிந்துகொள்ள...!!

# கருங்குளம் மா.முருகன்

சிரித்துக் கொண்டிருந்த பசுந்தளிர்...!!





 மண்ணை முத்தமிட்டு வீழ்ந்த
சருகின் மரண ஓலத்தை கேட்ட பின்னும்
இன்னும் வாழ்வேன் காலமெல்லாம் என நினைந்து
அழகாய் சிரித்துக் கொண்டிருந்தது பசுந்தளிர்...!!

# கருங்குளம் மா.முருகன்

புத்துலகில் புது உயிராய் பிறப்போம்




சக்தியும் சிவமுமாய் தாண்டவமாடிட
வாராயோ சித் அம்பலம்தனிலே
நினைவுகளின் சங்கமத்தில்
ஊழிக் கூத்திலும் உவகை கண்டு
பெரும் பிரளயத்திலும் ஒன்றாயொடுங்கி
புத்துலகில் புது உயிராய் பிறப்போம்
ஜீவ அமிழ்துண்டு மரணம் வென்று
நித்திய பேரானந்தத்தில் திளைப்போம் யாண்டும்...!!

# கருங்குளம் மா.முருகன்






இன்னொரு தளிர் துளிர்க்க...!!








மண் தந்த நீரில்
வளர்ந்த தளிரும்
காதலொடும் நன்றியொடும்
சருகாய் மண்ணில் கலந்திட...
மண்ணும் எற்றது உரமாய்
இன்னொரு தளிர் துளிர்க்க...!!

# கருங்குளம் மா.முருகன்

நீயும் உன் தேன் குரலும்








உனைக் காணா பொழுதுகளிலும்
உன் குரல் தேனிசையாய் எனக்குள் ஒலிக்கிறது.
நினைவுகளில் நீயும் உன் தேன் குரலும்
நீ என்னோடு இல்லை என்பதையே பொய்யாக்குகின்றன....!!

# கருங்குளம் மா.முருகன்

நினைவுப் பெருநதி








என்னுள் பிரவகிக்கும்
உன் நினைவுப் பெருநதியில்
நீந்திக் களிக்கிறேன் சந்ததமும்...!!

# கருங்குளம் மா.முருகன்

தின்னும் நினைவுகள்








உன் நினைவுகள் எனை
மெல்ல மெல்ல தின்பதை
உணரா வண்ணம் மரத்துப்
போய் விட்டேன் நான்...!!

# கருங்குளம் மா.முருகன்

தாலாட்டும் இசை

 





நீ இல்லா பொழுதுகளில்
உன் நினைவெனும் இசை
தாலாட்டுகிறது என்னை..
உன்னோடு இருக்கும்
பொழுதுகளிலோ நீ
என்னை நெஞ்சத்தில் தாலாட்டுகிறாய்...!!

# கருங்குளம் மா.முருகன்

கனவு மலர்ப் பாமாலை








கனவு மலர்களைக் கொய்து
உன் நினைவெனும் நாரில் தொடுத்து
பாமாலையாய் சூடுவேன் உனக்கு..
நினைவிலும் கனவிலும் என்னோடு
கரம் கோர்த்து நடக்கும் உனக்குத் தர
என்னைவிட அருஞ்சிறப்பாய் வேறெதுவும் உளதோ...?


# கருங்குளம் மா.முருகன்

சொல்லிலடங்கா சுகம்




சந்தை இரைச்சலிலும் தன்னுள் ஒடுங்கி
பிரபஞ்சத்தின் தோற்றுவாயைத் தேடி விரிபவன்
சொல்லிலடங்கா சுகத்தில் திளைக்கிறான்.
அமைதி தவழும் கானகத்தில் தனிமையில்
புலன்களின் வழியே புற உலகில் சஞ்சரிப்பவன்
தனக்குள் பேரிரைச்சலுடன் கொந்தளிக்கும்
பெருங்கடலாய் அலைமோதித் தத்தளிக்கிறான்...!!

# கருங்குளம் மா.முருகன்

மதமெனும் மாயப் பேய்




கீதையும் விவிலியமும் குரானும்
கரையானுக்கு உயிர் பிழைக்கச் செய்யும் உணவு.
மனிதர்களுக்கோ மதம் பிடித்து
உயிர் பறிக்கத் தூண்டும் கொலை வாள்...!!

# கருங்குளம் மா.முருகன்

Thursday, June 13, 2013

முப்பொழுதும் உன் நினைவுகளில்.....





முப்பொழுதும் உன் நினைவுகளில்
மூழ்கி யிருந்ததால் எனைக் கடந்து
போவோர் வருவோ ரெலாம் கண்கள்
நோக்கினாலும் கருத்தில் பதியவில்லை.....
ஏனடா சுரத்தே இல்லாமல் பித்தாயிருக்கிறாய்
என உயிர் நண்பன் உலுக்கியபின் தான்
நனவுலகம் திரும்பினேன்.
உன் நினைவுகளுக்குத் தான்
எத்தகைய வல்லமை..?
எனை முழுதாக மந்திரத்தில்
மயக்க முற்றவனைப் போல்
கட்டிப் போட்டு விடுகின்றனவே....!!

# கருங்குளம் மா.முருகன்

அன்புப் பெருமழை

 
 



நீ பேசாது தவிர்த்த பொழுதுகளில்
ஆவேசப் புயலாய் மையம் கொண்ட நான்
இதழோரத்தில் புன்னகை தவழ கண்களில்
ஒட்டுமொத்த காதலையும் தேக்கி நீ
கருணையுடன் கண்கள் சிரிக்க நெருங்குகையில்
அன்புப் பெருமழையாகி குளிர்ந்திட்டேன்....!!


# கருங்குளம் மா.முருகன்

அமாவாசை என்றும் எனக்கேது...?




இருண்ட என் வானில்
நிலவென வந்து ஒளி தந்தாய்
நீ இருக்க அமாவாசை என்றும் எனக்கேது...?


# கருங்குளம் மா.முருகன்

நினைவே என் மூச்சுக் காற்று

 




நின் நினைவே என்

மூச்சுக் காற்றானதால்
நின் நினைவிருக்கும் வரை
நான் இருப்பேன்.
பிரளயத்திலும் நின் நினைவிருக்கும்
நின் நினைவும் நானும்
தோற்றமும் முடிவுமிலாது
என்றென்றும் இருப்போம்....!!

# கருங்குளம் மா.முருகன்

கருணை மழை வெள்ளம்





உன் விழிகள் சொரிந்த
கருணை மழை வெள்ளத்தில்
என் மனதில் படிந்திருந்த கவலை
அழுக்குகளெல்லாம் அடித்துச் செல்லப்பட
வெள்ளை உள்ளத்தில் பேருவகை
நறுமணமாய் பரவி நிறைந்தது...!!

# கருங்குளம் மா.முருகன்

எனக்குள் சங்கமிக்கிறாய்....!!









உன் வெட்க
அணை உடைந்து
பெரு வெள்ளமாய்
என்னுள் படர்ந்து பாய்கிறாய்..
நிற்காமல் வேகமாய்
என்னுள் இயங்கி
பேரானந்தக் கடலில்
எனக்குள் சங்கமிக்கிறாய்....!!

# கருங்குளம் மா.முருகன்

உயிர் வதைக்கும் சாதி....

 



இதயங்கள் ஒன்றாகின
உணர்வுகள் ஒன்றாகின
உயிர்களும் ஒன்றாகின
சாதி இரண்டாக்கியது
கண்களும் வற்றிப் போக
காதல் வாழ்ந்தது...
காதலர்கள் வீழ்ந்தார்கள்....!!

# கருங்குளம் மா.முருகன்

காதல் மலர்ந்தது

 






கண்கள் கலந்தன
காதல் மலர்ந்தது
உயிர்கள் கலந்தன
மோட்சம் எய்தின..!!

# கருங்குளம் மா.முருகன்

அடைமழை








பூமித்தாயை பிரிந்து
சூரியக் காதலனொடு
சென்ற நீர்மகள் மீண்டும்
பூமித் தாயை கண்டு மடி புரண்டிட
பெரும் வேட்கையோடு
வருகிறாள் அடைமழையாக....!!

# கருங்குளம் மாமுருகன்

நான் என்பதன் மூலம் நீ









நான் என்பதன் மூலம் நீயென்ப துணர்ந்தேன்
காண்போனும் காட்சியும் நீயன்றி வேறில்லை
மெய்யகச் சிறைகளில் உழன்றவை தாமெனும்
பொய்த் தளையறுத்தே பூரணமாய் மெய்யறிவே
செய்தவம்கூடி செம்மையா யெங்கும் துலங்கிடாயோ


# கருங்குளம் மாமுருகன்

காமப் புழுதி

 




காமப் புழுதியில் புரண்ட மனதிற்கு
வியர்வை பன்னீராய் மதி மயக்கும்
அழுக்கு தேகமும் வழுக்கும் மெழுகு
சிற்பமாய் இழுக்கென மறந்து இழுக்கும்
அற்ப சுகத்தில் தன்னை இழப்போர்
சொற்ப மானமும் நற்பேரும் இழப்பர்

# கருங்குளம் மாமுருகன்


மனதில் உறுதி வேண்டும்








எது வேண்டு மென்பதில் தெளிவோ டிருந்தால்
வேண்டியதை முயற்சியால் வென்று விடலாம்
இதுவா அதுவா தெளிவின்றி குழம்பித் திரிந்தால்
எதுவுமே கிட்டாமல் எமாந்தும் போகலாம்
இலக்கில்லா பயணம் ஊர் போய்ச் சேராது

# கருங்குளம் மாமுருகன்

நீ வருவாய் என









நீ வருவாய் என இதயமும்
இரட்டிப்பாய்த் துடிக்கிறது
மகிழ்ச்சியும் படபடப்பும்
உயிருக்குள் உருள்கிறது...!!



# கருங்குளம் மாமுருகன்

தாவிக் குதிக்கும் மனம்








உனைக் கண்டதும்
தாயைக் கண்ட சேயாய்
என் மனம் தாவிக்
குதிக்குது உன்னிடம்...!!


# கருங்குளம் மாமுருகன்

நினைவுப் பறவை

 



தாகத்தில் அலைந்து திரியும்
நினைவுப் பறவை தீஞ்சுவை
நீர்ச் சுனையை கண்டது போல்
உனைக் கண்டு குதூகலிக்கிறது...!!

# கருங்குளம் மாமுருகன்


தேன் சுமக்கும் பூக்கள்





மகரந்தச் சேர்க்கை நடந்து
தன் இனம் பல்கிப் பெருகி
காலமெல்லாம் ஜீவித்திருக்க
வண்ணத்துப் பூச்சிகளை
ஈர்க்க தேன் சுமக்கும் பூக்கள்
இறுமாப்பு கொள்கின்றன தம் அழகில்....!!


# கருங்குளம் மாமுருகன்

பேரன்பின் ஊற்று



 உயிரனைத்தின் தோற்றுவாய் பேரன்பின் ஊற்று
வெவ்வேறு திசைகளில் நதியாய் கிளை நதியாய்
பயணிக்கும் மானுடம் பாயும் மண்ணின் நிறத்தால்
வேறுபட்டாலும் தெளிந்த மூல இயல்புணர்ந்தால்
அறுபடுமே வெறுப்பெலாம் ஆனந்தமும் மலராதோ...!!

# கருங்குளம் மாமுருகன்



பேராண்மை








உனக்கென ஒருத்தி வருவாள்
அன்றேல் உன்னில் பாதியாய்
உன்னோடு வாழ்ந்து கொண்டிருப்பாள்
உன்னவள் தவிர்த்து பெண்டிரெலாம்
தாயாய் சோதரியாய் நோக்கும்
நற்சிந்தை வாய்த்தால் நீயே
பேராண்மை படைத்த ஆண்மகன்
அன்றேல் மன வீர்யமிலா கோழை...!!

# கருங்குளம் மா.முருகன்

காற்று விடு தூது








காற்றைத் தூது அனுப்புகிறேன்
என் உயிரில் கலந்த
நினைவுகளாலும் உணர்வுகளாலும் நிரப்பி
காற்றைத் தூது அனுப்புகிறேன்...
காற்றில் மிதந்து வரும்
என் உணர்வுகள் உன்னை ஸ்பரிசிக்கிறதா...?

# கருங்குளம் மா.முருகன்

நீ கேட்காதே வாய்தா








கோவைச் செவ்விதழ் வாய் தா
பாவை நீ கேட்காதே வாய்தா
இதழில் இதழ் வை தா
இன்பத் தீஞ்சுவை நாளும்
கூடாதே என்னோடு என யார் வைதா...!!

# கருங்குளம் மா.முருகன்

நினைவெனும் புதைகுழி









நின் நினைவெனும்
புதைகுழியில் புதைந்து போகிறேன்
உன்னையல்லால் யார்
என்னை மீட்க முடியும்...?

# கருங்குளம் மா.முருகன்

வாழ்வெனும் பெருங்கவிதையை

 







வாழ்வெனும் பெருங்கவிதையை
கடைசியாக மூச்சுவிடும் அந்நாளில்
வாசித்து முடித்திருப்பேன்..
முழுமையாக புரிந்திருப்பேனா
புதிராகவே புரியாது மடிந்திருப்பேனா
அநுபவித்தறிய காத்திருக்கிறேன் ஆவலுடன்...!!


# கருங்குளம் மா.முருகன்

என் மன வானில்

 




என் மன வானில்
பிரகாசிக்கும் பேரொளி நீ.
உன் நினைவுகளின்
ஒளிச் சிதறலில்
படரும் வானவில்லாய்
வண்ண ஜாலம் காட்டுகிறாய்..!

# கருங்குளம் மா.முருகன்


தீரா தாகம்





 அடை மழையாய்
உன்னில் பொழிகிறேன்..
உன் தீரா தாகத்தை தீர்க்கிறேன்..!

# கருங்குளம் மா.முருகன்

புன்னகை சிந்தும் எழில் முகம்




சீற்றத்துடன் எழும்பி வரும்
ஆவேசப் பேரலையும் கரை கண்டு
அடங்கித் தணிவது போல
உனைக் காணாத தவிப்பில்
பொங்கி வரும் உன் மீதான
கோப அலைகளும் அடங்கித் தணிகின்றன
உன் புன்னகை சிந்தும்
எழில் முகம் கண்டபின்னே....!!

# கருங்குளம் மா.முருகன்

உன் சுவாசத்தில் நான்




உன் மூக்குத்திக்கும்
என் மேல் பொறாமை
உன் சுவாசத்தில்
நான் கலந்திருப்பதால்...!

# கருங்குளம் மா.முருகன்

அன்பு மழை பொழிவு




குற்றாலச் சாரலாய்
உன் நினைவுகள் தாலாட்ட
நீயோ பருவ மழையாய்
வாராது பொய்த்தாய்
புயல் சின்னத்தைத்
தொடர்ந்து எப்போதோ பெய்யும்
வாராது வந்த மாமழையாய் வந்தாய்
அகம் குளிர்ந்தேன்
உன் அன்பு மழை பொழிவில்
வறண்ட என் அக நதியில்
கரை புரண்டோடும் வெள்ளப் பெருக்கு...!!

# கருங்குளம் மா.முருகன்

வெறுமையாய் ஆனேன் நான்....!!






வான் கடல் தனிலே நட்சத்திர மீன்கள் நீந்த
வெண்ணிலா கன்னியவள் மிதந்து வந்து
என்னையே குறுநகையுடன் நோக்க
வெட்கம் தின்றுவிட வெறுமையாய் ஆனேன் நான்....!!

# கருங்குளம் மா.முருகன்

நினைவுகளாய் துயில்கிறாய்




என் மனத் தடாகத்தில்
நின் பார்வை யெனும்
கல்லெறிந்து எழுந்திட்ட
சலனத்தில் அடியாழத்தில்
நினைவுகளாய் துயில்கிறாய்
எப்பொழுதும் என்னுள்ளே...!!

# கருங்குளம் மா.முருகன்