இஸ்லாம் பெண்களுக்கு எதிரானதா...?
இஸ்லாம்
தோன்றிய காலந்தொட்டு இஸ்லாமிய சமூகத்தில் பெண்களின் நிலை குறித்த விவாதம்
தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு வருகிறது. இஸ்லாம் பெண்களுக்கு மரியாதைக்குரிய
உன்னத இடமளித்து சொத்துரிமை உட்பட ஆண்களுக்கு இணையாக
அனைத்து உரிமைகளையும் சம அளவிலே அளிப்பதை
அடிப்படைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. இஸ்லாத்தில் திருமணம் ஒரு சமூக உடன்படிக்கையாகத்
திகழ்ந்தாலும், திருமணம் அடிப்படையில் இரு ஆன்மாக்களின் சங்கமம்
என்பது முகமது நபி அவர்களின்
புனித திருவாக்குகளில் (Sacred
Sunnats) ஒன்றாகும்.[i]
கணவனைத் தேர்வு செய்வதில் பெண்களின்
சம்மதம் பெறவேண்டியது அவசியம் என நபி
அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்.[ii] மணமகன்
மணமகளுக்கு மணக்கொடை (மஹர்) யளித்து மணம்
முடிக்க இஸ்லாம் வலியுறுத்துகிறது. விரும்பினால்
ஒரு கைம்பெண் மறுமணம் புரிவதையும் இஸ்லாம்
ஆதரிக்கிறது. கணவனுக்கு மனைவியிடத்து தீராத பிணக்கு நேருமெனில்
குரான் விதிப்படி ஒவ்வொன்றிற்குமிடையே
ஒரு மாத கால இடைவெளியில்
மும்முறை தலாக் கூறி மனைவியிடமிருந்து
மணவிலக்கு பெறமுடியும். அம்மூன்று மாத கால அவகாசத்தில்
தம்பதியர் சமாதானமாகி மணவாழ்வைத் தொடரவும் இஸ்லாம் வகை செய்கிறது.
சமரசம் ஏற்படவில்லையெனில் மண முறிவு பெற்று
வேறு ஏற்ற துணையுடன் மறுமணம்
புரியத் தடையேதுமில்லை. அதேபோல மனைவி கணவரிடத்து
அதிருப்தியுற்றால் அவர் பெற்ற மணக்கொடையைத்
திருப்பியளித்து மண முறிவு பெற
முடியும்.[iii]
திருகுர்ஆன்
பலதார மணத்தை ஆதரிக்கவில்லை.பெண்கள்
நாதியற்றவர்களாகவும் நிர்கதியாகவும் பாதுகாப்பின்றியும் காணப்படும் தவிர்க்க முடியாத சூழலில் மணமான
ஆண்கள் அவர்களை மணம் புரிந்து
வாழ்வளிக்க இஸ்லாம் பரிந்துரைக்கிறது.[iv]
எனவே பலதார மணம் இஸ்லாமிய
அடிப்படை விதிகளுக்கு முரணானது எனினும் அவசர அவசிய
சூழல் கருதி அதை இஸ்லாம்
அனுமதிக்கிறது. முகமது நபி வாழ்ந்த
காலத்தில் பதர் மற்றும் உஹாத்
போர்களில் பெரும் எண்ணிக்கையிலான ஆண்கள்
கொல்லப்பட்டனர். பெருமளவிலான பெண்கள் நிராதரவாக கைம்பெண்களாக
வாழ்விழந்து வாடிய போது பலதார
மணத்தின் மூலம் அவர்களுக்கு வாழ்வளிக்க
வேண்டிய நிர்பந்தம் எழுந்தது. முகமது நபி அவர்கள்
அநாதரவான கைம்பெண்களை மணம் முடிக்க ஆண்களை
ஊக்குவித்தார். ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட
பெண்களை மணமுடித்தால் அவர்களை உடல்,மன,
சமூக, பொருளாதார நிலைகளில் சம அளவில் திருப்தியுறச்
செய்யவேண்டும் என நபிகள் வலியுறுத்தினார்.
உங்களால் அவர்களுக்கு சம நீதி வழங்க
முடியாதெனில் ஒரு மனைவியுடனேயே வாழுங்கள்
என குரான் அறிவுறுத்துகிறது.[v]
போர்க் காலத்தில் வலியுறுத்தப்பட்ட பலதார மணம் பிற்காலத்தில்
தீராத நோய்கள் மற்றும் மகப்பேறின்மை
போன்ற காரணங்களால் நடைமுறையில் தொடர ஆரம்பித்தது. ஆனால்
தமிழகத்தில் முன்னோர் வழிவந்த இந்துப் பண்பாட்டின்
தாக்கத்தினால் இஸ்லாமியரிடையே பலதார மணம் புரிவது
குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.
பர்தா
மற்றும் புர்கா அணியும் பழக்கம்
இஸ்லாமிய நடைமுறையல்ல. இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரே
சிரியா, மெசபடோமியா, பெர்சியா மற்றும் எகிப்து தேசங்களில்
பெண்கள் பாதுகாப்பு மற்றும் நாகரிகம் கருதி
உடலை மறைக்கும் ஆடையணிந்து வந்தனர். பெண்கள் தம்மை மூடி
மறைத்துக் கொள்வது நவ நாகரிகம்
எனவும் அவ்வாறில்லாதவர்கள் துர் நடத்தை உள்ளவர்கள்
எனவும் அத்தேசங்களில் கருத்து நிலவியது. அரேபிய
நகரங்களில் அது போன்ற உடை
கலாச்சாரத்தைப் பெண்கள் பின்பற்றியதில்லை. பிற்காலத்திலேயே
அரேபிய மேல்தட்டு பெண்களிடையே நாகரிகத்தின் அடையாளமாக பர்தா மற்றும் புர்கா
அணியும் பழக்கம் பிரபலமாகத் தொடங்கியது.
பெரும்பாலான அரேபிய இஸ்லாமியப் பெண்கள்
தங்கள் சகோதரர்களோடும் மற்றும் கணவர்களோடும் வயல்வெளிகளில்
விவசாயப் பணியை மேற்கொண்டதால்
அவர்கள் தங்களை திரையிட்டு மறைக்கும் பர்தா
அணிந்ததில்லை. எகிப்து, சிரியா, துருக்கி, மற்றும்
அரேபிய விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் எப்போதாவது
நகரங்களுக்கு செல்லும் போது மட்டுமே பர்தா
அணிந்து சென்றனர். பர்தா அணியும் முறை
முதன்முதலில் தோன்றியது சொராஸ்ட்ரிய பெர்சிய மற்றும் கிறிஸ்தவ
பைசாண்டிய நடைமுறையிலேயன்றி அரேபிய கலாச்சாரத்தில் அல்ல. நடைமுறை
சிக்கல்கள் காரணமாக பெரும்பாலான முஸ்லீம்
பெண்கள் பர்தா முறையை ஒருபோதும்
பின்பற்றியதில்லை.
“ ஓ
நபியே, மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களின் மனைவி, மக்கள் மற்றும்
பிற பெண்டிர் தமது முக்காட்டை கீழிழுத்து
விடச் சொல்லும். அப்போது தான் அவர்கள்
அடையாளம் காணப்படவும் துன்புறுத்தப் படாதிருக்கவும் கூடும் என திரு
குர்ஆன் குறிப்பிடுகிறது.”[vi]
தமிழகத்தில் குறிப்பாக தஞ்சாவூர், தென் ஆற்காடு, செங்கல்பட்டு
போன்ற வட மாவட்டங்களில் முஸ்லீம்
பெண்கள் பர்தா அணியும் நடைமுறை
காணப்படுகிறது. இராம நாதபுரம், திருநெல்வேலி
போன்ற தென் மாவட்டங்களில் முஸ்லிம்
பெண்களிடையே பர்தா அணியும் பழக்கம்
இல்லை. தற்காலத்தில் இளம் பெண்களிடையே புர்கா
எனும் கருப்பு மேலங்கி அணியும்
பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. தற்காலத்தில் இஸ்லாம் கொள்கைகளுக்கு விரோதமாக
மணமகள் வீட்டாரிடம் வரதட்சணை பெறும் கொடிய சமூக
அவலம் இஸ்லாமியர்களிடையேயும் நிலவுகிறது. பெண்களுக்கு
இஸ்லாம் வழங்கும் சமத்துவமும் சம உரிமையும் ஏட்டளவில்
இல்லாமல் செயலளவில் நடைமுறைப் படுத்தப் படுமானால் இஸ்லாமிய சமூகம் ஏற்றம் பெறும்
என்பது திண்ணம்.
ஆதார
நூல் குறிப்புகள்
No comments:
Post a Comment